அரசியலுக்கு யாரும் வரலாம்-விஜய்காந்த்
சென்னை: தேமுதிக தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு தன் பிறந்த நாளன்று பிறந்த 330 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்யும் திட்டத்தை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் துவக்கி வைத்தார்.
கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'பெண்கள் நாட்டின் கண்கள்" என்ற பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் டெபாசிட் திட்டத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 90 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.10,000 நிதியை எல்.ஐ.சியில் டெபாசிட் செய்து அதற்கான பத்திரங்களை குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய்காந்த், என் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகிறேன்.
சேலத்தில் வறுமை காரணமாக அடிக்கடி பெண் சிசு கொலைகள் நடக்கின்றன. இது போன்ற கொடுமைகளைத் தடுக்கவே என் சொந்தப் பணத்தில் தேமுதிக டிரஸ்ட் மூலம் பெண் குழந்தைகள் பெயரில் டெபாசிட் திட்டத்தை துவக்கியுள்ளேன்.
ஆளும்கட்சியினர் அதே போல தங்கள் சொந்தப் பணத்தில் நல்ல காரியங்களை செய்கிறார்களா?.
இந்த விழா மூலம் செல்வந்தர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஒவ்வொரு செல்வந்தரும் தனது பிறந்தநாளில் தங்கள் ஊரில் வாழும் ஏழைகளின் பெண் குழந்தைகளுக்கு இதுபோல டெபாசிட் செய்ய முன் வர வேண்டும் என்பதே.
இப்போது நான் செய்த டெபாசிட், 20 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் குழந்தை வளர்ந்து நிற்கும்போது அவருக்கு ரூ. 2 லட்சமாகக் கிடைக்கும். அதை வைத்து அந்தப் பெண்ணின் திருமணத்தை நடத்தலாம் என்றார்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்:
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று பதிலளித்தார்.
அதே போல நதிகளை இணைக்கக் கூடாது என்ற ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த விஜய்காந்த், அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால், நதிகள் இணைப்பு என்பது மிக மிக அவசியமானது என்றார்.