இந்தியா, சீனா..கிழக்கில் கிடைத்த புதிய நண்பர்கள்-இலங்கை
கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற கிழக்கிலிருந்து கிடைத்த புதிய நண்பர்களான சீனா மற்றும் இந்தியா போன்றவை உதவியதாக ஐ.நாவுக்கான புதிய இலங்கை தூதர் பலிதா கோஹனா தெரிவித்துள்ளார்.
ஐநாவுக்கான புதிய இலங்கை தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் பலிதா கோஹனா நியூயார்க் சென்றுள்ளார்.
அதற்கு முன்னதாக அவர் அளித்த ஒரு பேட்டியில்,
இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது மேற்கத்திய நாடுகள் இலங்கையை விட்டு விலகி செல்ல துவங்கின.
அமெரிக்கா மில்லினியம் சாலஞ்ச் அக்கவுன்ட் என்ற உதவி திட்டத்தை விலக்கி கொண்டது. இதனால் நாங்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்க இருந்தோம்.
அப்போது மிரட்டலுக்கு அஞ்சுவது அல்லது புலிகளுடன் சமாதானம் பேசுவது அல்லது கிழக்கு நாடுகளின் உதவியை நாடுவது என மூன்று வாய்ப்புகள் இருந்தது. அதில் மூன்றாவது வாய்ப்பை தேர்வு செய்தோம்.
இந்தியா, சீனா, ஈரான், லிபியா போன்ற நாடுகள் கொடுத்த முழுமையான ஆதரவு காரணமாக தான் எங்களால் புலிகளை ஒழிக்க முடிந்தது.
இதையடுத்து நாங்கள் எங்களது பாரம்பரிய தொடர்புகளை கிழக்கு நோக்கி தொடர ஆரம்பித்தோம். அது மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றார்.