சீன ஊடுருவல்-மத்திய அரசுக்கு ஜெ. சாட்டையடி!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மென்மையான நாடு என்ற முத்திரையை இந்தியா எப்பொழுதுமே தன்னகத்தே கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் இன்னும் சொல்லப்போனால் சிறிய நாடான இலங்கை ஆகிய நாடுகளின் அச்சுறுத்தலான பேச்சுகளை அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்கள் அனுமதித்து இருக்கின்றன.
இந்த நாடுகளிலிருந்து வரும் லட்சக்கணக்கான அகதிகளை விருந்தினர்களாக பாவித்து அவர்களை இந்தியா வரவேற்கும் அதே சமயத்தில், அவர்களது சொந்த மண்ணின் மைந்தர்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு நாடாக இருந்ததில்லை. பிற நாடுகளால் வஞ்சிக்கப்படும் நாடாகத் தான் இந்தியா விளங்குகிறது.
எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பாக இருந்தாலும் சரி, பாதிப்புக்கு ஆளாகும் நாடாகத்தான் இந்தியா விளங்குகிறது. கடினமாக உழைத்து, பல தியாகங்களை செய்து பெற்ற சுதந்திரத்தை திறமையற்ற முதுகெலும்பில்லாத நிர்வாகம் பண்டமாற்று முறையில் இழப்பதை நாம் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது.
நாட்டின் இறையாண்மையும், பாதுகாப்பும் சட்டவிரோதமாக பறிபோவதை இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ள முடியாது; பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
இந்த அடிப்படை உண்மையை மன்மோகன் சிங் அரசு உணர்ந்து, தேசப் பாதுகாப்பு குறித்த பிரச்சனையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் நன்றாக இருக்கும்.
நாங்கள் கேட்பது எஃகு போன்ற முதுகெலும்பு உடைய அரசாங்கம்! மிருதுவான பாகு போன்ற முதுகெலும்பற்ற அரசாங்கம் அல்ல!.
சீனப் படைகள் ஆக்கிரமிப்பு குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் தலைமையில், தரைப்படை, கப்பற் படை, விமானப் படைகளின் தலைவர்கள், மத்திய அமைச்சரவைச் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தவுள்ளது.
முதன் முதலில் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக செய்திகள் வந்தபோதே, அதாவது 15 நாட்களுக்கு முன்பே, இது போன்றதொரு கூட்டத்தை மத்திய அரசு உடனே நடத்தியிருக்க வேண்டும். அதன் பிறகு தான் மத்திய அரசின் சார்பில் மறுப்புகள் ஏதாவது இருந்தால் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், குதிரைக்கு முன்னால் வண்டியை கட்டிவிட்டு, தற்போது மத்திய அரசால் நடத்தப்படவுள்ள கூட்டமும் வெறும் கபட நாடகம்!, கேலிக்கூத்து!. இந்த கூட்டத்தின் முடிவு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்!.
மிகுந்த காலதாமதத்திற்கும், மத்திய அரசின் அக்கறையின்மைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது மிகவும் ஆபத்தான போக்காகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கூட்டம் ஒத்திவைப்பு:
இந் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையில் டெல்லியி்ல் இன்று நடக்கவிருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் கூறப்படவில்லை.












Click it and Unblock the Notifications