சென்னையில் 180 ஏக்கரில் அமையும் நிதி நகரம்
சென்னை: சென்னையில் நிதி நகரம் அமைக்க சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் அருகே கையகப்படுத்தப்படவுள்ள 180 ஏக்கர் நிலத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, இந்த நிதி நகரை உருவாக்குவது குறித்து அறிக்கையைத் தயாரித்துள்ளது.
இந்த நிதி நகர திட்டத்திற்கான வரைப்படம் உருவாக்குவதற்கு டிட்கோவிற்கு உதவி புரிய நிதி, வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதியகப்பணி ஆகிய துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி நகரில் பயிற்சி மையங்கள், அலுவலர் பயிற்சி கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களும் இடம் பெற்றிருக்கும்.
உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளுடனான இந்த நகரத்தை அமைக்க சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் கிராமங்களில் சுமார் 180 ஏக்கர் நிலங்களை அடையாளம் காணப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஸ்டாலின் இன்று சோழிங்கநல்லூரில் இந்த திட்டத்திற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தொழில்துறை முதன்மைச் செயலாளர் பரூக்கி, டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனிதா பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.