கோவையில் 'ஐஸ் பால் வெடிகுண்டு' - போலீசார் அதிர்ச்சி!
கோவை: கோவை மில் உரிமையாளர் வீட்டு மாடிப்படியில் துணியால் சுற்றப்பட்ட, திரியுடன் கூடிய ஐஸ் பால் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை - அவினாசி ரோடு, விஸ்கோஸ் டவருக்கு எதிரில் வசிப்பவர் ஷ்யாம் (43), மில் உரிமையாளர். இவர் வீரகேரளத்தில் பஞ்சாலை நடத்துகிறார். இவரது வீட்டின் மேல் தளத்தில் அலுவலகம் உள்ளது. அலுவலகத்துக்கு செல்ல கிரில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவரது வீட்டு வேலைக்காரப் பெண் முத்துலட்சுமியின் மகன் விக்னேஷ் (11),நேற்று காலை அலுவலக படிக்கட்டில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, அலுவலக கதவு அருகே முதல் படியில் சாம்பல் நிறத்துணியால் சுற்றப்பட்ட உருண்டையான பொருள் இருந்ததை எடுத்து விளையாடினான்.
அப்போது அங்கு வந்த, மற்றொரு தொழிலாளியின் மகன் மோகன்ராஜ் (20), விக்னேஷை அழைத்து, அவன் கையில் இருந்த பந்தை வாங்கிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலிருந்த துணியை பிரித்தபோது, உள்ளே ஐஸ்கிரீம் பால் இருந்தது. அதில் வெடிமருந்து நிரப்பப்பட்டு, நைந்து போன திரியால் இணைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். உடன், துப்பறியும் போலீஸ் மோப்ப நாயும் அழைத்துச் செல்லப்பட்டது.
இரண்டு மணி நேர சோதனைக்குப் பின்பு போலீசார் ஐஸ் பால் வெடிகுண்டை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2008, டிசம்பர் 10 ம் தேதி வடகோவை ரயில்வே டிராக்கில் இதே போன்று ஐஸ் பால் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications