வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு இந்தியாவில் தேர்வு
டெல்லி: வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் டாக்டராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து ஹார்வேர்டு, ஜான் ஹாப்கின்ஸ் என உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் என எங்கு படித்திருந்தாலும் இந்த தேர்வை எழுதினால் மட்டுமே இநதியாவில் டாக்டராக பயிற்சி செய்ய முடியும்.
நேபாளம் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2002 மார்ச் 15ம் தேதி தேர்வு ஒன்றை நடத்த திட்டமிட்டது.
இதை எதிர்த்து நேபாள மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பஞ்சல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் அந்த மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில்,
இந்திய குடிமகனாக இருப்பவர்கள் வேறு நாடுகளில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, இந்தியாவில் டாக்டராக பணியாற்ற நினைத்தால், இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வு முறைகளை பின்பற்ற வேண்டும்.
அதில் தேர்வு பெற்றால் மட்டுமே அவர்களுக்கு மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற அனுமதியளிக்கப்படும். இது 2002 மாரச் 15ம் தேதிக்கு பின்னர் வெளிநாட்டில் படிப்பு முடித்தவர்களுக்கு பொருந்தும். அவர்கள் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்.
பல நாடுகளில் அளிக்கப்படும் மருத்துவ கல்லூரிகளின் இந்தியாவின் தரத்துக்கு இல்லை. இதனால் இந்த தேர்வுகள் அவசியம் என்றனர்.