விளாத்திகுளம்-மாஜி எம்எல்ஏ தம்பி படுகொலை
விளாத்திகுளம் விளாத்திகுளம் அருகே திமுக முன்னாள் எம்எல்ஏ தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த சங்கர்ராமன் மகன் குமரகுருபர ராமநாதன். 1984-1989 வரை விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது மதிமுகவில் இருந்து வருகிறார்.
இவரது தம்பி ராஜராஜன் ரெட்டியார், இவரது மனைவி கிருஷ்ணகுமாரி, இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியில் சென்ற ராஜராஜன் இரவில் வீடு திரும்பவில்லை. பெரும்பாலும் அவர்களது உறவினர்கள் வீடுகளிலோ அல்லது அண்ணன் வீட்டி்லோ தங்கி விடுவார். நேற்றும் இதே போல் யார் வீட்டிலாவது தங்கியிருப்பார் என கருதிய குடும்பத்தினர் அவரை தேடவில்லை.
இன்று காலையும் அவர் வீடு திரும்பாததை அடுத்து அவரது செல்போனுக்கு மனைவி கிருஷ்ணகுமாரி தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து ராஜராஜன் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளாரா என போனில் விசாரித்த போது அவர் வீட்டிற்கு வரவில்லை என தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியைடந்த அவரது உறவினர்கள் ராஜராஜனை தீவிரமாக தேடினர். இந்நிலையில் அரியநாயகிபுரம் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள கரிசல் காட்டு பகுதியில் ராஜராஜன் கழுத்தில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறி்த்து விளாத்திகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து டிஎஸ்பி சியமளை தேவி, இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைநது உடலை கைப்பற்றி விளாத்திகுளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜராஜன் எதற்காக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications