நெல்லையில் வெடிகுண்டுகளுடன் வாலிபர் கைது
நெல்லை: நெல்லையி்ல் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்ட வாலிபர், முக்கிய பிரமுகர்களின் உறவினரை தீர்த்து கட்ட சதி திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் நிக்சன். பாமக மாவட்ட தலைவரான இவர் பைனான்ஸ் மற்றும் கேப்ஸ் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 3ம் தேதி நிக்சன் பாளை சித்த மருத்துவ கல்லுரி அருகே உள்ள தனது அலுவலகத்தில் இருந்த போது அங்கு காரில் வந்த செட்டிகுளத்தை சேர்ந்த பாட்ஷா என்ற அந்தோணிராஜ், ராமசந்திரன், உள்பட 5 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் விட்டு தப்பியோடினர்.
பாளை போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். பாட்ஷா மும்பைக்கு தப்பியோடிவிட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய ஸ்டீபன் கடந்த மூன்று வாரத்திற்கு முன் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார். மேலும் நாசரேத் உடையார்குளத்தை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் வேறொரு வழக்கில் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தகவல் அறிந்ததும் பாளை போலீசார் சென்று அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த நாகராஜன் என்பவரை கைது செய்தனர்.
பாட்ஷா கூட்டாளியான நாகராஜன் பாளை கக்கன்நகர் பைபாஸ் ரோடு அருகே குளக்கரையில் பதுக்கி வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.
நெல்லையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினரை தீ்ர்த்து கட்ட இந்த வெடிகுண்டுகளை அவர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.