டெல்லி வான்பகுதியைக் காக்க ஹெலிகாப்டர் மூலம் ரோந்து
டெல்லி: காமன்வெல்த் போட்டிகள் போன்ற முக்கியமான தருணங்களில் டெல்லியைப் பாதுகாக்க ஹெலிகாப்டர் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
வழக்கமான பாதுகாப்பின் ஒரு அங்கமாக இனி ஹெலிகாப்டர் ரோந்தும் இடம் பெறும் எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லி வான் பகுதியில் ஹெலிகாப்டர் ரோந்து வரும் நாள் வெகு தொலைவில் உள்ளது. சிறப்பு தருணங்களில் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும்.
டெல்லி போலீஸாருக்கு விரைவில் கூடுதல் உளவு வசதிகள் செய்து தரப்படும். மேலும் கண்காணிப்புப் பணியை திறம்பட செய்வதற்கான வசதிகளும் செய்து தரப்படும்.
போலீஸார் தெருத் தெருவாக நடந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குற்றச் செயல்கள் குறைய வேண்டும். மூத்த குடிமக்கள், மாணவர்கள் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கான சூழல் உருவாக வேண்டும்.
பூங்காக்களில் அமர்ந்து பேசும் காதலர்களும் கூட பாதுகாப்பாக உணர வேண்டும் என்றார்.