ரூ. 1.23 கோடி மோசடி-தூத்துக்குடி பிஷப் மீது வழக்கு!
தூத்துக்குடி: தூத்துக்குடி சிஎஸ்ஐ டயோசீசன் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களிடம் வசூலித்த ரூ. 1 கோடி 23 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக பிஷப் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நாசரேத்தில் உள்ள சிஎஸ்ஐ டயோசீசன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடந்த 1.4.2007 முதல் 31.3.2009 வரை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் 2 சதவீதத்தை பிஷப் உத்தரவின் பேரில் கட்டாய பிடித்தம் செய்யப்பட்டது.
இதில் வசூல் செய்யப்பட்ட ரூ. 1 கோடியே 23 லட்சம் கணக்கில் வரவில்லை என்பது சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து தென்னிந்திய திருச்சபை உறுப்பினர் மற்றும் ஊழியர் நலச்சங்க செயலாளர் தூத்துக்குடி சோப்பர் ஜோதிபால் (40), பிஷப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஜேஎம்-1 நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பிஷப் ஜே.ஏ.டி. ஜெபச்சந்திரன் (59), பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் (61), செயலாளர் மாணிக்கம் (58) மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் சாமுவேல் ஞானதுரை (43), தேவசகாயம் (56), சுரேஷ் தங்கராஜ் சாம்சன் (41), தேவி அசோக் சுந்தர்ராஜ் (59), இர்வின் சார்லஸ் (54) ஆகிய 8 பேர் மீது மோசடி உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.