ஸ்வைன்: ஒரே நாளில் 13 பேர் பலி-இந்தியாவில் 277 ஆக உயர்வு
டெல்லி: பன்றி காய்ச்சலுக்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 5, மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 3, உத்தரகண்டில் 1 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் நேற்று 2 பேர் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்கள். மேலும் அங்கு முன்னதாக இறநத 3 பேருக்கு பன்றி காய்ச்சல் இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில புனே, நாசிக், மும்பை மற்றும் நாக்பூரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பெங்களூரில் இருவரும், உடுப்பியில் ஒருவரும் இறந்துள்ளனர்.
இதையடுத்து மகாராஷ்டிராவில் 112, கர்நாடகாவில் 85, ஆந்திராவில் 28 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்திய அளவில் இந்த எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் இந்த நோய் சுமார் 283 பேருக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 113 பேருக்கு தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 65 பேர் பள்ளி மாணவர்கள் என்பதலா டெல்லியில் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
ஆந்திராவில் 43, மகாராஷ்டிராவில் 35, தமிழகத்தில் 34, ஹரியானாவில் 25, கர்நாடகாவில் 22 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது.