வாசன்-சிதம்பரம் கோஷ்டிகள் மோதல்: உறுப்பினர் விண்ணப்பம் கிழிப்பு
கரூர்: இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் விவகாரத்தில் வாசன் மற்றும் சிதம்பரம் கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் கிழித்து எறியப்பட்டது.
சமீபத்தில் இளைஞர் காங்கிரஸ்க்கு ஆள் சேர்ப்பதற்காக அக்கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பார்வையாளராக மைசூர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரகுராஜ் அர்ஸ் இருந்து வருகிறார்.
அவர் கடந்த 45 நாட்களாக கரூர்-கோவை சாலையிலுள்ள பெரீஸ் என்ற ஹோட்டலில் தனது குடும்பத்தோடு தங்கியிருந்து பணிகளை கவனித்து வருகிறார்.
நேற்று மாலை 5 மணியுடன் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்கள் வாங்குவது நிறுத்தப்படும் என்று கட்சி தலைமை அறிவித்திருந்தது. இருப்பினும், கட்சியினிரின் வேண்டுகோளின்படி இரவு 7 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் வாங்குவது நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கரூரில் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டப்படும் பார் கோடு தீர்ந்து போனது. ஆனால், அதை திட்டமிட்டு ஒரு கோஷ்டியினர் தீர்த்துவிட்டதாக மற்றொரு கோஷ்டியினர் புகார் செய்தனர். இதையடுத்து வாசன் கோஷ்டியும், சிதம்பரம் கோஷ்டியும் மோதிக் கொண்டனர்.
மேலும், ரகுராஜ் ்ர்ஸ் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஆத்திரமடைந்த ஒரு கோஷ்டியினர் அவரது அறையிலிருந்த உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தியினர்.
இது குறித்து தேர்தல் பார்வையாளர் ரகுராஜ் அர்ஸ் கூறுகையில்,
கரூர் பகுதியில் 18 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 9 ஆயிரம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பார்கோடு ஒட்டப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 ஆயிரம் பார்கோடுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. கரூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஆயிரம் பார்கோடுகள் முடிந்து விட்டது.
எனவே, தற்போது பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தலைமையின் அனுமதி பெற்று பார்கோடு ஒட்டப்படும் என்று தெரிவித்தேன்.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத சக்திவேல், சிவசாமி, முனீஸ்வரன், தனசேகர், ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் பிரச்னையில் ஈடுபட்டதோடு பார்கோடு ஒட்டிய விண்ணப்பங்களைக் கிழித்தெறிந்தனர். இது குறித்து தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளேன் என்றார்.