தனியார் மருத்துவமனையில் பணி-அரசு டாக்டர்களுக்கு தடை
புதுக்கோட்டை: தமிழக அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசின் உயிர் காக்கும் உயர்சிகிச்சை திட்டம், மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 16 லட்சத்து 98 ஆயிரம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதே போன்று இலவச ஆம்புலன்ஸ் 108 சேவையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது .
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை, 1,223 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது 44 பேர் மட்டுமே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமைடந்து வீடு திரும்பிவிட்டனர்.
28 ஆயிரத்து 468 பேருக்கு வேலை...
காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக, தனிப்பயிற்சி பெற்ற டாக்டர்கள் உட்பட 28 ஆயிரத்து 468 மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் பணிநேரத்தின் பெரும் பகுதியை தனியார் மருத்துவமனைகளில் செலவிடுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது.
எனவே, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளாவைப் போன்று தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடைவிதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது என்றார்.












Click it and Unblock the Notifications