பன்றிக் காய்ச்சல் - புதுவையில் பெண் பலி - இந்தியாவில் இதுவரை 298 பேர் மரணம்
புதுச்சேரி: புதுச்சேயில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலியாக 52 வயதுப் பெண் மரணமடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண். பன்றிக் காய்ச்சல் காரணமாக அவர் புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுக் கழகத்தில் (ஜிப்மர்) செப்டம்பர் 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
மோசமான நிலையில் இருந்து வந்த அவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக ஜிப்மர் இயக்குநர் டாக்டர் கே.எஸ்.வி.கே. சுப்பாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி மருத்துவமனை ஒன்றில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியாவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் இதுவரை 298 பேர் பலி ..
இதற்கிடையே, பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 298 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 189 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் ஐந்து பேர் உயிரிழந்தனர். புதுவை தவிர கர்நாடகத்தில் 2 பேரும், குஜராத், உ.பியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
மொத்தமாக நாடு முழுவதும் 298 பேர் இறந்துள்ளனர். 9694 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.