சோபியான் கற்பழிப்பு - 2 பெண்களின் உடல்கள் தோண்டியெடுத்து பரிசோதனை
சோபியான் (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் கற்பழித்துக் கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களும் நேற்று தோண்டி எடுக்கப்பட்டன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சோதிப்பதற்காக உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன.
சோபியான் பகுதியைச் சேர்ந்த நீலோபர் ஜான் மற்றும் அவரது மைத்துனி அசியா ஜான் ஆகியோர் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இதைக் கண்டித்து காஷ்மீரில் கிட்டத்தட்ட 47 நாட்கள் பெரும் போராட்டம் நடந்தது. ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் பெயரும் இதில் இழுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இருவரது உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து டிஎன்ஏ மாதிரிகளை சோதிக்க மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு முக்கிய காரணம் - இவர்களின் உடல்களில் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் முரண்பாடான தகவல்களை வெளியிட்டதே.
உடல்களை மீண்டும் தோண்டியெடுக்கும் உத்தரவைப் பிறப்பித்த மாஜிஸ்திரேட், கான்டே கூறுகையில், உண்மை வெளிவர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மக்கள் ஆதரவு இதற்கு உள்ளது. தவறு செய்த டாக்டர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
இதையடுத்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டன. இவை டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு புதிதாக தடயவியல் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து சோபியான் உள்ளூர் மக்கள் கமிட்டி தலைவர் முகம்மது ஷபி கான் கூறுகையில், சிபிஐயை நாங்கள் நம்புகிறோம். உடல்களை மீண்டும் தோண்டியெடுக்கும் முடிவு சரிதான். இதன் மூலம் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறோம் என்றார்.