முருகன் வேடத்தில் மு.க. ஸ்டாலின் பேனர்-இந்து அமைப்புகள் கண்டனம்
கரூர்: தமிழ் கடவுள் முருகன் வேடத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளதால் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இந்த டிஜிட்டல் பேனரை உடனே அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.அக்டோபர் மாதம் 3 ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு திட்ட விழாக்களில் பங்கு பெறவும், திமுக சார்பில் நடைபெறும் பெரியார், அண்ணா சிலை திறப்பு விழாவிற்கும் ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
இதையொட்டி திமுகவினர் தற்போது முதலே சாலையின் இரு புறமும் டிஜிட்டல் பேனர் , போஸ்டர், தட்டி என தூள் கிளப்பி வருகின்றனர்.
இந் நிலையில், லைட்வுஸ் கார்னர் ரவுண்டானா அருகில் முருகன் படத்தோடு மு.க. ஸ்டாலின் படத்தையும் இணைத்து தமிழ் கடவுளே வருக வருக என்று டிஜிட்டல் பேனரை திமுகவினர் வைத்துள்ளனர்.
மலேசியாவின் புகழ் பெற்ற பட்டுக் குகை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள பிரமாண்ட முருகன் சிலையின் உருவத்தில் ஸ்டாலின் முகத்தை இணைத்து இந்த டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் பேனரைக் கண்டு ஆவேசம் அடைந்துள்ள இந்து அமைப்புகள் சில, தமிழ் கடவுள் முருகனை அவமதிக்கும் இந்த பேனரை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போலவே, கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் இளம் வள்ளுவரே வருக என்று வள்ளுவர் வேடத்தில் மு.க. ஸ்டாலின் படத்துடன் பேனரை திமுகவினர் வைத்துள்ளனர். இதற்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.