சொத்துத் தகராறில் மோதல் - போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
திண்டுக்கல்: சொத்து தகராறில் போலீசார் குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதலில் ஏட்டு உட்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திண்டுக்கல் அருகே உள்ள குரும்பபட்டி. இங்கு வசித்து வருபவர் பாண்டியராஜன். இவர் திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவரது உடன் பிறந்தவர்கள் 6 பேர். இவர்களுக்கு நொச்சி ஓடைப் பட்டியில் சொந்த நிலம் உள்ளது. இதை பங்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்த போது, தகராறு ஏற்பட்டது.
இதில், இவரது மூத்த அண்ணன் ராஜா, அவரது மனைவி காளியம்மாள், தம்பி செல்வம், செல்வத்தின் மனைவி அனார்கலி, ராஜாவின் மகன் ராஜாசந்திரன் ஆகியோர் அரிவாளால் பாண்டியராஜனை தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதில் பாண்டியராஜனுக்கு இடது உள்ளங்கை, முழங்கை, வலது ஆட் காட்டி விரல், முதுகு பகுதிகளில் வெட்டு விழுந்தது. இதை தடுக்க வந்த சகோதரர் அழகுமலை ராஜாவுக்கு வயிற்றில் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏட்டை வெட்டிய ராஜா மற்றும் அவரது மகனை சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.