பெட்ரோல் குண்டு வீசி ரகளை-11 பேருக்கு வலை
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பெட்ரோல் குண்டு வீசி பெரும் ரகளையில் ஈடுபட்ட 11 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் ஆயுத பூஜை தினத்தன்று கொள்ளிடம் ஆற்றில் தனது டிராக்டரைக் கழுவிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தனது பொக்லைனுடன் ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வந்தார். அப்போது கீழே வைத்திருந்த செந்தில்முருகனின் செல்போன் மீது பொக்லைன் ஏறி விட்டது. இதில் செல்போன் சேதமடைந்தது.
அப்போது உடன் இருந்த சண்முகத்தின் நண்பர் முருகன் என்பவர் செந்தில் முருகனை தாக்கியு்ளார்.
இந்தத் தகவல் வடக்கு மாங்குடிக்குப் பரவியதும் அந்த ஊரைச் சேர்ந்த சிலர் முருகனின் செங்கல் சூளையை தாக்கி சேதப்படுத்தினர். இதையடுத்து முருகன் தனது ஆதரவாளர்களுடன் செந்தில்முருகன் மற்றும் அவரது மாமா செழியன் ஆகியோரை அரிவாளால் வெட்டினார். மேலும் பெட்ரோல் குண்டையும் வீசி, செந்தில்முருகனின் வைக்கோல் போர், மோடடார் சைக்கிள், சைக்கிள் ஆகியவற்றை எரித்து சேதப்படுத்தினார்.
செந்தில்முருகனின் உறவினரான இளவரசன் என்பவர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் முருகன் உள்ளிட்ட 11 பேரை தேடி வருகிறார்கள்.