பன்றிக் காய்ச்சலுக்கு புதுச்சேரியில் 2வது பலி
புதுச்சேரி: புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சலுக்கு 2வது நபர் பலியானார்.
புதுச்சேரியில், கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதுப் பெண்மணி, ஜிப்மர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று இன்னொருவர் பலியாகியுள்ளார். அவர் 32 வயது ஆண். தமிழகத்தின் கட்டளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஜிப்மர் மருத்துவமனையில் இவர் பன்றிக் காய்ச்சல் காரணாக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.
முதலில் இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் ஜிப்மருக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அங்குதான் அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
புனே பலி 66 ஆனது
இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 66 பேர் பலியாகியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர்.
48 வயதான காசர்பாய் லோன்டே, 27 வயதாகும் விகாஸ் பிரம்நாயக் ஆகியோர் இன்று உயிரிழந்தனர்.
இதுவரை புனேவில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக புனேவில் சிறுமி ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். அது முதல் தொடர்ந்து புனேவில் உயிர்ப்பலி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.