ஸ்டாலின் விழாவிற்கு எதிர்ப்பு - தீக்குளிக்க போவதாக காங். அறிவிப்பு
திருநெல்வேலி: ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு கருணாநிதியின் பெற்றோர் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க கோரியும் தீக்குளிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது என்று காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர், அஞ்சுகம் பெயர் சூட்டப்பட்டு அவர்களின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 13 ம் தேதி அன்று திறந்து வைக்கின்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட் இருந்த இடம் காமராஜர் திடல் என இருந்தது. எனவே, பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைத்து, அங்கு அவரது சிலையையும் வைக்க வேண்டும் என காங்கிரசார் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், போராட்டக்குழு ஜெயக்குமார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோர் கூறுகையில், ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்க மறுத்தை கண்டித்து எங்கள் பகுதி வீடுகளில் நேற்று முதல் கறுப்பு கொடி ஏற்றியுள்ளோம்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சுடலைமுத்து என்பவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
காக்கா பிடிப்போம்...
காமராஜர் பெயர் வைக்க கோரி கழுதை, எருமை மாடுகளிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்துவோம். காக்கா பிடிப்போம்.
திறப்பு விழா அன்று காமராஜர், கக்கன் திருஉருவ சிலையை அங்கு நிறுவுவோம். இதற்காக சிலைகள் தயாராக உள்ளது. மேலும், அன்று தீக்குளிக்கும் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.
இதனால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழாவின் போது தீக்குளிக்கப்போவதாக திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசார் அறிவித்துள்ளது தமிழக அரசியலை பரபரப்பு அடையவைத்துள்ளது.