ரூ. 800 கோடி டெலிகாம் ஊழல் வழக்கை மூடுவதை எதிர்த்து மனு
டெல்லி: நாட்டை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய ரூ. 800 கோடி தொலைத் தொடர்பு ஊழல் வழக்கை மூட நினைத்துள்ள சிபிஐக்கு இடைஞ்சலாக ஒரு மனு வந்துள்ளது.
வழக்கை மூட சிபிஐக்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி டெல்லி கோர்ட்டில் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 199ம் ஆண்டு மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் எனப்படும் எம்டிஎன்எல் நிறுவனம் தனது குறுகிய தொலைவு செல்போன் சேவைக்காக, 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளுக்கான டென்டரைக் கோரியிருந்தது. மூன்று கட்டங்களாக இதை நிறைவேற்ற அது திட்டமிட்டிருந்தது.
இந்த டெண்டரைப் பிடிக்க மோட்டாராலோ நிறுவனம் எம்டிஎன்எல் உயர் அதிகாரிகளுக்கு பெருமளவில் லஞ்சம் கொடுத்ததாக அப்போது சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து எம்டிஎன்எல் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.பி. சின்ஹா, பொது மேலாளர் பி.சிங் உள்ளிட்ட 19 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை மூடி விட சிபிஐ முடிவு செய்துள்ளது. இந்தப் பின்னணியில், சிறப்பு சிபிஐ கோர்ட்டில், தொலைத்தொடர்பு கண்காணிப்பு என்ற என்ஜிஓ நிறுவனத்தின் செயலாளர் அனில்குமார் என்பவர் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்த வழக்கை மூட சிபிஐக்கு அனுமதி தரக் கூடாது என்று கோரியுள்ளார். இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஓ.பி. சைனி, இந்த மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனால் தொலைத் தொடர்பு ஊழல் வழக்கை முடித்துக் கொள்ள நினைத்துள்ள சிபிஐக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.