டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்
சென்னை: “டாஸ்மாக்" நிறுவனத்தில் பணியாற்றும் 30,000 பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.
இது குறி்த்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“டாஸ்மாக்" நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்கள், “சி" மற்றும் “டி" பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் இந்த அரசு 2006ல் பொறுப்பேற்ற பிறகு 2006-2007, 2007-2008 ஆகிய ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது போலவே 2008-2009ம் ஆண்டிற்கும் 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை சேர்த்து மொத்தம் 20 சதவீதம் போனஸாக வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாக ஏறத்தாழ 30,000 “டாஸ்மாக்" நிறுவனப் பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.18.94 கோடி போனஸாக வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நன்றி:
தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் பி.சவுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் அளிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை ஊழியர் சங்கம் வரவேற்கிறது. முதல்வருக்கு பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.