ராமர் கடவுள் இல்லை என்று கூறிய புத்ததேவ் மீது பீகாரில் வழக்கு
முசாபர்பூர்: ராமர் கடவுள் அல்ல என்று பேசிய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி மீது பீகார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி புத்ததேவ் மீது முசாபர்பூர் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ்.கே.ஓஜா என்பவர், முசாபர்பூர் முதன்மை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ராமர் கடவுள் அல்ல, ராமர் பாலம் ஒரு இயற்கையான அமைப்பு, அதை மனிதர்கள் கட்டவில்லை என்று பேசியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ். இது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. எனவே அவர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து முசாபர்பூரில் உள்ள சதார் காவல் நிலையப் போலீஸார் இதுகுறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய காவல் நிலையம், 2008ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதையடுத்து புத்ததேவ் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டது.
ஆனால் போலீஸார் கோர்ட் கூறியபடி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து தாமதத்திற்கான விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சதார் காவல் நிலையம் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த புகார் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாக கூறியிருந்தனர்.
இதையடுத்து எஸ்.பி. அலுவலகத்திலிருந்து புகார் தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி ஆவணங்கள் வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி புத்ததேவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
ராஜ் தாக்கரேவுக்கு கைது வாரண்ட்:
இதற்கிடையே மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு பீகார் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் அவர்கள் பீகார் மக்கள் குறித்து வெறுப்பு ஏற்படும் வகையில் பேசினர். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் மீது பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ராஜ தாக்கரே விளக்கம் தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், ராஜ் தாக்கரே தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி,
ராஜ் தாக்கரேவை கைது செய்து முசாபர்பூர் நீதமன்றத்தில் வரும் நவம்பர் 2ம் தேதிக்குள் ஆஜர்படுத்துமாறு மும்பை போலீஸ் கமிஷ்னருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications