வன்னி முகாமமுக்கு வெள்ள அபாயம்-அலட்சியம்
கொழும்பு: இலங்கையில் விரைவில் பருவமழை துவங்கவிருப்பதால் வன்னி முள்வேலி முகாம்கள் வெள்ளநீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பலர் பலியாகலாம் என்றும் ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இதை அலட்சியம் செய்த இலங்கை, வெள்ளநீரை வெளியேற்ற தேவையான வசதிகள் செய்து வருவதாக கூறியுள்ளது.
போர் முடிந்த நிலையில் தற்போது வன்னி முள்வேலி வதை முகாம்களி்ல சுமார் 3 லட்சம் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த திடீர் மழையில் முகாம் முழுமையும் தேங்கிய குட்டை போல் காட்சி அளித்தது. அதுவரை தண்ணீரை மட்டுமே நம்பி உயிர் வளர்ந்து வந்த தமிழர்களின் அந்த நம்பிக்கையும் மோசம்போனது.
மேலும், முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தற்காலிக வீடுகளும் சேதமடைந்தன. இன்றுவரை அவை சீர் செய்யப்படவில்லை.
இந்நிலையில் விரைவில் இலங்கையில் பருவமழை காலம் தொடங்கவிருப்பதால் அதற்குள் தமிழர்களை தங்களது இருப்பிடத்தில் குடியமர்த்த வேண்டும் என இலங்கை அரசிடம் எதிர்கட்சிகளும், ஐநாவும் கோரிக்கை வைத்துள்ளது.
ஐநா அகதிகள் விவகார நிபுணர் வால்டர் கைலின் சமீபத்தில் முகாம் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் இலங்கை அரசிடம் நிலைமை மோசமாக இருக்கிறது என மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
பருவமழையின் போது முகாம்களின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்க நேரிடும். அவர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போய்விடும். பலரது வாழ்க்கையும், சுகாதாரமும் கேள்வி குறியாக இருக்கிறது என்றார்.
ஆனால், இலங்கை அரசோ இது எதையும் காதில் வாங்கி கொண்டதாக தெரியவில்லை.
இது குறித்து இலங்கை மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே கூறுகையில், நீரை வெளியேற்ற தேவையான வசதிகளை வேகமாக செய்து வருகிறோம். இதில் ஐநாவும் எங்களுக்கு உதவி வருகிறது என்றார்.
முகாம் நிரந்தரமாகிவிடும்...
பிபிசி நிறுவனத்துக்கு மனோ கணேசன் என்ற இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அளித்த பேட்டியில், முகாம்களில் இருக்கும் சூழ்நிலைகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. முகாம் வாழ்க்கையே அவர்களுக்கு நிரந்தமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மீண்டும் துப்பாக்கி சூடு...
இந்நிலையில் 9 நாட்களுக்கு முன்பாக வன்னி முகாமில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை.
முகாமின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முயன்ற சிலரை ராணுவத்தினர் சுட்டுள்ளனர். அதில் 2 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக இலங்கை ராணுவம் சில தமிழர்களையும், இலங்கை ராணுவ வீரர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications