பன்றிக் காய்ச்சலுக்கு தமிழகத்தில் மேலும் 2 பேர் பலி
நாகர்கோவில்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது உயிர்ப் பலி அடுத்தடுத்து வேகமாக ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே பன்றிக் காய்ச்சலுக்கு நான்கு பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை வேப்பமூட்டு விளையை சேர்ந்த பிரான்சிஸ் (64) என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரை நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர்.
அவருக்கு பன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள் தென்பட்டதால் அவரை பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் பகல் 12.30 மணிக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பகல் 3.30 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி மூத்த டாக்டர் ஒருவரிடம் கேட்ட போது, பிரான்சிசுக்கு பன்றி காய்ச்சல் உள்ளதா? என்பது உறுதி செய்யப்படவில்லை. அவரின் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். அதன் முடிவு வந்தால் அவர் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்று குறிப்பிட்டார்.
ஜி்ப்மரில் 3வது பலி...
இதேபோல் கடலூர் மாவட்டம் வடலூர் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம் (26) என்பவர் புதுச்சேரி வில்லியனூர் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த சனிக்கிழமை அவர் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனே அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஜிப்மரில் ஏற்கனவே 2 பேர் இறந்துள்ளனர். இவரையும் சேர்த்து தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த மூன்று பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications