சென்னையில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் நீர் புகுந்தது- ஒருவர் பலி?
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. பலர் வீடுகளை காலி செய்து சாலை ஓரத்தில் வசித்து வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதி கடல் சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு சாதாரண சமயங்களிலும் பெரும் அலைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீசித்து (24) என்பவர் கடந்த 2ம் தேதி தனது நண்பர் தினேஷ் என்பவருடன் இப்பகுதியில் மணல் பரப்பில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று வந்த பெரிய அலை ஒன்று அவரை இழுத்து சென்றுவிட்டது. கடல் அலைகளுக்கு இடையே சிக்கி கொண்ட அவர் கைகளை உயர்த்தி தன்னை காப்பாற்றுமாறு கூறிய போதிலும், கடலுக்குள் இறங்க யாரும் துணியவில்லை.
இந்த சம்பவம் நடந்து 4 நாட்களாகிய போதும் அவரது உடல் கிடைக்கவில்லை. உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெளர்ணமி என்பதால் நேற்று அலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மேலும், கடல் நீர் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் 500 மீ வரை ஊருக்குள் வந்தது.
சுமார் 10க்கும் மேற்பட்ட குடிசைகளில் இருந்த அரிசி, பருப்பு, சாமான்களை அடித்து சென்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். முக்கியமான பொருட்களை தெரிந்தவர்கள் வீட்டில் வைத்துவிட்டு சாலையில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று இரவு சுமார் 11.30 மணிக்கு சென்னை மாவட்ட கலெக்டர் ஷோபனா அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். குடிசைகளை இழந்த மக்களை சமுதாய கூடத்தில் தங்குமாறு கேட்டு கொண்டார். ஆனால், திருட்டு பயம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் அங்கு செல்லவில்லை.
இந்த கடல் சீற்றத்துக்கு சீனிவாசபுரம் தேவாலயமும் சேதம் அடைந்துள்ளது. அதன் பெரும்பான்மையான பகுதிகள் கடல் அரிப்பில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலையும் அப்பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications