முலாயம் மருமகளுக்கு எதிராக ராஜ் பாப்பர் போட்டி
லக்னெள: உத்தரப் பிரதேச மாநிலம் பெரோஸாபாத் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முலாயம் சிங்கின் மருமகள் டிம்பிள் யாதவை எதிர்த்து காங்கிரஸ் நடிகர் ராஜ் பாப்பரை நிறுத்தியுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பறக்கிறது.
கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், பெரோஸாபாத் மற்றும் கன்னோஜ் தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் இரண்டிலுமே அவர் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் பெரோஸாபாத் தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அங்கு அடுத்த மாதம் 7ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அகிலேஷ் யாதவின் மனைவியும் தனது மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுவார் என கட்சி தலைவர் முலாயம் சிங் அறிவித்துள்ளார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாப்பரும், பகுஜன் சமாஜ் சார்பில் பாகேல் சிங்கும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் சமாஜ்வாடி கட்சியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.