For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வக்கீல்கள் தாக்கியதால்தான் தடியடி-கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போலீஸார் தாங்களாக நுழையவில்லை. அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதாலும், வக்கீல்கள் போலீஸாரை தாக்கியதாலும்தான் லத்தி சார்ஜ் செய்ய வேண்டியதாயிற்று என்று சென்னை மாநகர முன்னாள் ஆணையரும், கூடுதல் டிஜிபியுமான ராதாகிருஷ்ணன் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வக்கீல்கள் - போலீஸார் இடையிலான மோதல் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

நேற்று கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் (சம்பவம் நடந்தபோது மாநகர ஆணையராக இருந்தவர்) மற்றும் 11 காவல்துறை அதிகாரிகள் சார்பில் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி வாதிட்டார்.

தவான் வாதிடுகையில்,

கோர்ட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் அவர்களாக வரவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால்தான் உயர்நீதிமன்றத்துக்குள் வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த நிர்ப்பந்தத்தின் பேரில் வந்த போது, வக்கீல்கள் போலீசாரை தாக்கினார்கள்.

போலீசார் தாக்கப்பட்டதால்தான் பதிலுக்கு லத்தி பிரயோகம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உயர்நீதிமன்ற வளாகம் பொது இடம் என்பதால் போலீசார் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

கட்டுக்கோப்புடன்தான் இருந்தனர் போலீஸார்...

ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் இருக்கும் போது மேலே போய் பதிவாளரிடமோ, அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமோ அனுமதி வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. போலீசார் ஆரம்பத்தில் கட்டுக்கோப்புடன்தான் இருந்தார்கள். அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் லத்தி பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

லத்தி பிரயோகம் செய்தது தவறு என்று சொல்ல முடியாது. லத்தி பிரயோகம் செய்த போது சில போலீசார் தவறு செய்திருந்தால் அதற்கு ஒட்டுமொத்த காவல்துறையையும் பழி சொல்ல முடியாது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் கேட்பது நியாயமில்லை. காரணம் என்னவெனில், போலீஸ் அதிகாரிகள் பிரச்சினையை தீர்ப்பதற்குதான் வந்தனர். பிரச்சினையை பெரிதுபடுத்துவதற்காக அவர்கள் வரவில்லை.

வக்கீல்கள் அப்படியே போயிருந்தால் பிரச்சினையில்லை..

இந்த சம்பவத்திற்கு போலீஸ் கமிஷனர்தான் பொறுப்பு என்று சில வக்கீல்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த போலீஸ் அதிகாரிதான் போலீசாரை கட்டுப்படுத்தி வெளியே அழைத்து சென்றார்.தன் பிறகு வக்கீல்கள் அப்படியே சென்றிருந்தால் பிரச்சினை இல்லை. தீ வைப்பு சம்பவத்திலும், தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்களை தாக்கியதாலும் மீண்டும் லத்தி சார்ஜ் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தலை சிறந்த அதிகாரி ராதாகிருஷ்ணன்...

முன்னாள் போலீஸ் கமிஷனர் கே.ராதாகிருஷ்ணன் இந்தியாவில் தலை சிறந்த போலீஸ் அதிகாரி. சட்டக்கல்லூரி பிரச்சினைக்கு பிறகு அவர் பிரத்யேகமாக சென்னை நகருக்கு கொண்டு வரப்பட்டு அந்த பிரச்சினையை தீர்த்து வைத்தவர்.

"பல்வேறு மதங்களை சார்ந்தவர்கள் வாழும் சமுதாயத்தில் எப்படி காவல்துறை செயல்பட வேண்டும்'' என்று பேசுவதற்காக கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு வரவழைக்கப்பட்டவர் அவர்.

உலகெங்கும் இருந்து அழைக்கப்பட்ட 8 அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

கோவை மத கலவரத்தை சமாளித்ததற்காக இங்கிலாந்து ராணியின் விருதை பெற்றவர். இவ்வளவு சிறப்பு பெற்ற அதிகாரியை தண்டிக்க வேண்டும் என்று வக்கீல்கள் கூறுவதை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இப்படிப்பட்ட அதிகாரிகளை பாதுகாப்பதில் அரசுக்கும், இந்த நீதிமன்றத்திற்கும் கடமை உள்ளது.

சென்ற சில மாதங்களாக இந்த வழக்கு சம்பந்தமாக முன்னாள் மாநகர கமிஷனர் ராதாகிருஷ்ணனுடன் உரையாடிய போது அவர் ஒரு திறமை மிக்க சிறப்பான உயர்ந்த மனிதர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆகவே அவரை இந்த நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் என்று வாதிட்டார் ராஜீவ் தவான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X