ராதாபுரம் வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயர்-ஸ்டாலின்
திருநெல்வேலி: ராதாபுரம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு துணை முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பேருந்து நிலையத்துக்கு முதல்வரின் பெற்றோர் பெயரும், அங்கிருக்கும் வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் ரூ.2.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், ரூ. 71 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றை துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13ம் தேதி திறந்து வைக்கவிருக்கிறார்.
இந்த நிலையில் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்கள் பெயர் வைக்கப்பட இருக்கிறது. ஆனால், இதற்கு காங்கிரஸார் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை அறிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஜெயராமன் கூறுகையில்,
ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு முதல்வரின் பெற்றோர்கள் முத்துவேலர், அஞ்சுகம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அங்கு அவர்களது சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
காமராஜர் பெயர் வைக்கக்கோரி தனிநபர்கள் மட்டுமே போராட்டங்களை நடத்தினர். எனவே, பேருந்து நிலையத்தில் கட்டப்படும் வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயர் வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றார்.