விபத்து இல்லாத தீபாவளி-கமிஷனர் வேண்டுகோள்
சென்னை: இந்த ஆண்டு வெடிவிபத்து இல்லாத தீபாவளி கொண்டாட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி நெருங்கி விட்டது. இன்னும் நான்கு நாட்கள்தான் தீபாவளிக்கு உள்ளது. இந்தநிலையில், கடந்த மாதம் முதல் தொடர்ந்து பட்டாசு தொடர்பான விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த வீடு இடிந்து சிறுமி உள்பட பலர் இறந்தனர்.
இம்மாதம் தஞ்சை வானமர்கோட்டையில் வீட்டில் பட்டாசு தயாரித்த பெண் பரிதாபமாக பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன் சோழவந்தான் ரயில்வே நிலையத்தில் பட்டாசு வெடித்து இருவர் பலியாயினர்.
இதையடுத்து பட்டாசு விபத்துகளை தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் கூறுகையில்,
இந்த ஆண்டு விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் 466 தற்காலிக பட்டாசு கடைகளும், வட சென்னையில் 19 நிரந்தர பட்டாசு கடைகளுக்கும் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. அதை கோல்டன் அவர்ஸ் என்பர். அந்த சமயங்களில் 108 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தொடர்பு கொண்டால் பெரும் சிக்கலை தவிர்க்கலாம்.
பட்டாசு வெடிப்பவர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
நெல்லையில் தீவிர கண்காணிப்பு...
நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் குணசீலன் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
வெடிமருந்து கிட்டாங்கி, குடோன்களை போலீஸார் தணிக்கை செய்ய இருக்கின்றனர். வெடிகள் அதிக ஸ்டாக் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்.
உரிமம் இன்றி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காய வெடிகளை தயாரிப்பவர்களை பற்றிய தகவல்களை அறிந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சேமிப்பு கிடங்குகளில் வெடிமருந்து வாங்குபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். பேருந்துகளில் வெடிபொருட்களை கொண்டு செல்வது தடுக்கப்படும். உரிமம் பெற்ற சில்லரை விற்பனையாளர்கள், கடைகளில் தீ விபத்தை தவிர்க்க மணல் மற்றும் தண்ணீர் வைத்திருத்த வேண்டும்.
கடைகளின் உள்ளே பொதுமக்களை அனுமதிக்க கூடாது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. 125 டெசிபலுக்கு மேல் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications