ஈராக் ராணுவ வீரருக்கு சென்னையில் முக சீரமைப்பு ஆபரேஷன்
சென்னை: ஈராக்கில் நடந்த துப்பாக்கி சூட்டில் முகத்தின் ஒரு பாதி முழுவதும் சேதமடைந்த நிலையில் சென்னை வந்த ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை மூலம் முகம் சீரமைக்கப்பட்டது.
ஈராக்கை சேர்ந்த ராணுவ வீரர் ஹசனியான் இப்ராஹிம் நூரி. பாக்தாத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இவரை கண்மூடித்தனமாக சுட்டனர்.
துப்பாக்கி சூட்டில் தப்பிக்க முயன்ற அவரது பின் கழுத்து பகுதியை துளைத்த ஒரு புல்லட் மூளையின் அடிப்பகுதி வழியாக சென்று வலது கண்ணின் அடிப்பகுதி வழியாக வெளியேறியது. இதனால் அவரது முகத்தின் வலது பக்க தாடை மற்றும் கண் எழும்புகள் ஆகியவை சேதமடைந்தன.
இதையடுத்து அவருக்கு பாக்தாத்தில் முதல் உதவி அளித்த கையோடு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முக அறுவை சிகிச்சை மையத்தில் அவர் சேர்க்கப்ப்டடார். அங்கு டாக்டர் எஸ்எம் பாலாஜி தலைமையிலான குழு சேதமடைந்த அவரது முக தாடை, கண் எழும்பு மற்றும் தசைகளை அவரது விலா பகுதியில் இருந்து எடுத்த தசை மற்றும் டைட்டானிய பொருட்களை பயன்படுத்தி சீரமைத்தனர்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்த ஈராக் ராணுவ வீரர் பழைய முகத்துடன் கடந்த 10ம் தேதி சொந்த நாடு திரும்பினார்.