குஜராத் துணிக் கடை அதிபரிடம் ரூ. 56 லட்சம் மோசடி- சென்னையில் மூவர் கைது
சூரத்: சூரத்தில் இருக்கும் துணி கடை ஒன்றில் ரூ. 56 லட்சத்துக்கு சரக்கு வாங்கி பணம் கட்டாமல் ஏமாற்றிய மூன்று பேரை போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.
இது குறித்து சூரத், சலாபத்புரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏஆர் பாலாஷ் கூறுகையில்,
சூரத் லாம்பே ஹனுமன் சாலையில் வசிக்கும் விக்ரம் ராஜ்புரோகித் என்பவர் கடந்த செப்டம்பர் 17ம் தேதி ஒரு புகார் தெரிவித்தார்.
அதில் ரிங் ரோடு பகுதியில் இருக்கும் அசோகா டவரில் நான் துணிக்கடை வைத்திருக்கிறேன். அங்கு கமல் சந்திரா, ரமேஸ்கிரி, சுரேஷ்கிரி, தர்மகிரி மற்றும் பிரகாஷ்கிரி கோஸ்வாமி என்னும் 5 நபர்கள் கடந்த ஜூன் 1ம் தேதி என்னை சந்தித்து, கடனுக்கு துணி வாங்கி சென்றனர்.
பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி வரை என்னிடம் தொடர்ந்து கடனுக்கு துணி வாங்கி சென்றனர். ரூ. 56 லட்சம் துணி எடுத்த அவர்கள் பணம் கேட்ட போது தர மறுத்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சூரத்தில் இருந்த கமல் சந்திராவை நாங்கள் கைது செய்தோம். மேலும், ரமேஸ்கிரி என்பவர் தானாக வந்து சரணடைந்துவிட்டார். அவர்களிடம் விசாரித்த போது மற்ற மூன்று பேர் சென்னையில் இருப்பது தெரியவந்தது.
கடந்த வாரம் சென்னை வந்து அவர்களையும கைது செய்தோம். அவர்களிடம் துணிகளை மீட்க முயன்றோம். ஆனால், அவர்கள் அதை விற்று விட்டதாக கூறிவிட்டனர். அவர்களிடம் யாரிடம் விற்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த இருக்கிறோம் என்றார்.