இதை தான் சொல்ல போகிறது திமுக குழு-ஜெ
சென்னை: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் ஆய்வு என்ற பெயரில் ஒரு குழுவை அனுப்பியுள்ள முதல்வர் கருணாநிதி, இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் கேலிக்கூத்தாக்கி விட்டார், ஏமாற்ற நினைக்கிறார் என்று கடுமையாக கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைக்கு சென்றுள்ள "அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு'' என்பது "அனைத்துக்கட்சி'' தொடர்புடைய விவகாரம் இல்லை. அதனால்தான் இந்த குழுவில் சேர்ந்து கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பிதழ் அளிக்கப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதன்மூலம இது அனைத்துக் கட்சி குழு அல்ல என்ற உண்மையை கருணாநிதியே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி ஒரு குழுவை அனுப்பும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதனால்தான் எதிர்க்கட்சிகளை இந்தக் குழுவில் சேருமாறு அவர் அழைப்பு விடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள மைனாரிட்டி திமுக அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட அரசியல்வாதிகளைக் கொண்டு இலங்கைக்கு குழுவை அனுப்பியுள்ளனர்.
ஆனால், இந்தக்குழு உறுப்பினர்களை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குழு என்று தவறாக நினைத்து, 10 அரசியல்வாதிகளுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து ஏமாந்து இருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.
இப்போதே யூகிக்க முடியும்:
தமிழகத்திலிருந்து இலங்கை சென்றுள்ள 10 அரசியல்வாதிகளின் சுற்றுப்பயண முடிவு எப்படி இருக்கும் என்பதை எளிதில் யூகித்துக் கொள்ள முடியும். இலங்கை அரசின் அடக்குமுறை எந்த தமிழர் பகுதியில் மிகக்குறைவாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறதோ, அங்கு தான் இந்த குழுவினர் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ராஜபக்சேவின் சிங்கள பெரும்பான்மை அரசால் தேர்வு செய்யப்படும் பணியாளர்களான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் மட்டுமே அவர்கள் கலந்துரையாட முடியும்.
உண்மையை உரைக்கக்கூடாது என ராஜபக்சே அரசால் அச்சுறுத்தப்பட்டு, இலங்கை அரசின் பாதுகாப்பிற்குட்பட்ட ஏதாவது ஒரு முகாமில் உள்ள இடம் பெயர்ந்த சில தமிழர்களை இந்த குழுவினர் பேட்டி காண ஏற்பாடு செய்யப்படும். இந்த ஏமாற்றுக்குழு திரும்பி வந்தவுடன் கருணாநிதியிடம் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமைகளை நேரில் பார்த்ததை, கண்டதை, இந்த குழு பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவிக்கக்கூடும். மிகப்பெரிய பிரச்சினையை கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு கிட்டத்தட்ட நான்கு லட்சம் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை மனப்பூர்வமாக செய்ய முயற்சித்து வருவதாக இந்த குழு தெரிவிக்கும். சில குறைபாடுகள் இருக்கின்றன என்றும், மிகப்பெரிய பிரச்சினையை கையாளும்போது இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றும் யதார்த்தமாக இந்த குழுவினர் ஒத்துக்கொள்வார்கள்.
மிகக் குறுகிய காலத்தில் தன்னால் எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்வதாக ராஜபக்சே மனப்பூர்வமாக உறுதி அளித்ததாகவும் தெரிவிப்பார்கள்.
இதன் மூலம், ஒட்டுமொத்த தமிழினத்தை ஏமாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். ஆனால், ஐம்பது ஆண்டு கால தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டம் என்னவாகும்? சிங்களர்கள் மட்டும்' என்ற கொள்கை மற்றும் தங்கள் சொந்த மண்ணிலேயே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்ட கேடு விளைவிக்கக்கூடிய முறையான தரப்படுத்துதல்' ஆகியவை என்னவாகும்? என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications