அல் கொய்தாவுக்கு பண கஷ்டம்!-செல்வ செழிப்பில் தலிபான்!!
லண்டன்: பொருளாதார மந்த நிலை தீவிரவாதிகளையும் போட்டுப் பார்த்துள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு கடும் பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறதாம். செலவுகளைச் சமாளிக்க திணறுகிறார்களாம்.
ஆனால் அதற்கு நேர் மாறாக தற்போது தலிபான்களுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டுகிறதாம்.
பிபிசி செய்தி நிறுவன ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. இதுகுறித்து அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி டேவிட் கோஹன் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில்,
அல் கொய்தாவின் வருவாய் குறைந்து போய் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் அதன் பயிற்சி மற்றும் ஆளெடுப்புத் திட்டங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
நிதியுதவிக்காக பல்வேறு தரப்பையும் அணுகிக் கொண்டிருக்கிறது அல் கொய்தா. பல வருடங்களாகவே இப்படி நிதிப் பற்றாக்குறையில் அல் கொய்தா உழன்று வருவதாக அறிகிறோம். இதன் காரணமாக இதன் தாக்கம் தற்போது படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது என்றார்.
ஆனால் மறுபக்கம் தலிபான்கள் பெரும் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறார்களாம். காரணம், ஆப்கானிஸ்தானில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் மூலம் வரும் ஏராளமான வருவாய் தான்.
இதனால் தலிபான்களின் கட்டமைப்பு தற்போது பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளது. இதனால் இதற்கு பணம் எப்படி வருகிறது, என்பது கூட சரிவர தெரியாத நிலை உள்ளது. இந்த பணப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவது அமெரிக்காவால் கூட இயலாத காரியமாக உள்ளதாகவும் கோஹென் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், அல் கொய்தா தற்போது பலவீனமடைந்திருந்தாலும், அல் கொய்தாவின் நிலை மேம்படும்போது அவர்கள் சொல்வதை கேட்டுச் செய்யும் தீவிரவாதிகள் இன்னும் அழியாமல்தான் உள்ளனர். எனவே அல் கொய்தா பலவீனமடைந்து வருவதை முழுமையான மகிழ்ச்சியான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்.