வசுந்தரா..முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக!
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை ஏற்க ராஜே மறுத்துவிட்டார்.
இதையடுத்து வசுந்தராவை நீக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. ஆனால் அவரது ஆதரவாளர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 59 பாஜக எம்எல்ஏக்கள் டெல்லிக்கு வந்து வசுந்தராவுக்கு ஆதரவாக அத்வானியில் இல்லம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அதற்குள் ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி ஆகியோரின் விவகாரங்கள் வெடித்ததாலும், அத்வானியை பதவி விலகுமாறு ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டதாலும் பாஜகவில் மேலும் குழப்பங்கள் உருவாகின.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ராஜே, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு பாஜக கூட்டங்களில் பங்கேற்பதை நீண்ட நாட்களாகத் தவிர்த்து வந்தார்.
இப்போது கட்சியில் கொஞ்சம் அமைதி நிலவுவதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நேற்று கூடியது.
ஆனால், இக் கூட்டத்தை மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, கோபிநாத் முண்டே, வெங்கைய்ய நாயுடு, பால் அப்தே ஆகியோர் புறக்கணித்துவிட்டனர். இவர்கள் ராஜேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து வசுந்தரா விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இக் கூட்டம் கலைந்தது.
மேலும் ராஜஸ்தானில் வரும் நவம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் நடப்பதால் அதுவரை வசுந்தரா மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கலாம் என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பதவி விலகியே ஆக வேண்டும் என்ற தகவலை ராஜேவிடம் தெரிவி்க்குமாறு சுஷ்மா சுவராஜை ஆட்சி மன்றக் குழு கேட்டுக் கொண்டது.
இது தவிர அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் நிலம் ஒதுக்கியது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.