பன்றி காய்ச்சல்-சென்னையில் புதுச்சேரி பெண் பலி
சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி சங்கரிக்கு (48) பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அவரது உடல் நிலை தேறவில்லை. கோமா நிலைக்குச் சென்ற அவர் நேற்று மாலை இறந்தார். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் நேற்று ஒரு பெண், 40 வயது ஆண் ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெண்ணின் நிலைமை மோசமாக உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களையும் சேர்த்து ஜிப்மர் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்புடன 50 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.
6 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் ஸ்வைன்:
இந் நிலையில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மூன்று மாணவர்கள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேரும் கோரிமேட்டில் உள்ள மார்பு நோய் மருத்துவமனைக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தனர். அவர்களை சோதித்த போது அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்து.