உலக தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு ஏன் - கருணாநிதிக்கு வைகோ கடிதம்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இதுதொடர்பாக விளக்கி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வைகோவின் கடிதம்...
கோவை மாநகரில் தமிழக அரசு முன்னின்று நடத்த இருக்கின்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், எங்கள் இயக்கம் பங்கேற்க அழைப்பு விடுத்து, கடிதம் அனுப்பியுள்ளீர்கள்.
1966-ல் தொடங்கி, இதுவரை நடைபெற்ற 8 மாநாடுகளும், உலகத் தமிழ் மாநாடு' என்ற பெயரிலேயே நடைபெற்றுள்ளன. இப்பொழுது தமிழக அரசு நடத்த முற்பட்டுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, அத்தகைய உலகத் தமிழ் மாநாடு அல்ல.
இதுவரை உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதற்குக் கடைபிடிக்கப்பட்ட விதிகள், முறை, மரபு, இவற்றுக்கெல்லாம் மாறாகவும், உலகத் தமிழ் மாநாடு என்பதற்கான ஒழுங்கு நியதியைப் புறந்தள்ளும் வகையிலுமே, கோவையில் நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ள மாநாடு அமையும்.
இது மட்டுமன்றி, உலகமெல்லாம் உள்ள தமிழர்கள், ஆற்ற முடியாத துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர். இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை, தமிழ்க்குலத்தின் வரலாற்றிலேயே இதுவரை எந்தக் காலத்திலும் நடைபெற்றிராத பேரழிவாகவும், கொடுந்துயராகவும் நேர்ந்துள்ளது.
எனவே உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சமெல்லாம் வேதனைத் தீ பற்றி எரிகிறது. சிங்களர் நடத்திய இனப்படுகொலை யுத்தத்துக்கு, இந்திய அரசு, ஆயுதங்களையும், அனைத்து உதவிகளையும் வழங்கி, தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்தது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் தமிழக அரசு தவறியது.
இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு முன்னின்று நடத்த இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வர் கருணாநிதியுடன் வைகோ நேரடியாக மேற்கொண்ட முதல் தொடர்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.