அருணாச்சல் பிரச்சினை குறித்து மன்மோகன் சிங், வென ஜியாபோ பேசவில்லை
ஹூவா ஹின் (தாய்லாந்து): படு பரபரப்பாக இந்திய, சீனத் தலைவர்களால் பேசப்பட்டு வரும் அருணாச்சல் பிரதேசம் தொடர்பாக இந்திய, சீன பிரதமர்களின் சந்திப்பின்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.
தாய்லாந்தில் ஹூவா ஹின் நகரில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபோ உள்பட 16 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அங்கு மன்மோகன் சிங்கை, சீன பிரதமர் சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது இந்தியத் தரப்பில் பிரதமரின் செயலாளர் நாயர், வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
மன்மோகன் - வென் சந்திப்பின்போது சமீப காலமாக இரு நாடுகளிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அருணாச்சல் பிரதேசப் பிரச்சினை, எல்லைப் பகுதியில் நடைபெறும் சீன ராணுவத்தினரின் ஊடுறுவல் உள்ளிட்ட எது குறித்தும் பேசப்படவில்லை.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ரவி பின்னர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிக்கையில், தோழமையான சூழலில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மன்மோகன் சிங் சீனத் தரப்பிடம் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகள், இரு நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைக்க விட்டு விடக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.
அரசியல் மட்டத்தில் சரியான புரிந்து கொள்ளுதல், நம்பிக்கை வலுப்படுவது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
வென் ஜியாபோ கூறுகையில், அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக அமையும். எனவே சீனாவும், இந்தியாவும் ஒற்றுமையுடனும், தோழமையுடனும், வளமுடனும் திகழ வேண்டியது அவசியம் என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்தும், அருணாச்சல் பிரதேசம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அருணாச்சல் பிரதேசம் தொடர்பாக இந்தியா - சீனா இடையே வார்த்தைப் போர் வெடித்து வேகம் எடுத்து வ்நதது. பிரதமர் மன்மோகன் சிங் அருணாச்சல் பிரதேசத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றதை கடுமையாக விமர்சித்திருந்தது சீனா. இதற்கு பதிலடி கொடுத்தது இந்தியா.
மேலும் தலாய் லாமா அருணாச்சல் பிரதேசத்திற்கு செல்லவிருப்பதையும் சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் இரு நாட்டின் பிரதமர்களும் சந்தித்ததால் இதுகுறித்து பேசப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்தப் பேச்சும் இடம் பெறவில்லை.












Click it and Unblock the Notifications