செம்மொழி மாநாட்டு ஆய்வரங்க குழு தலைவராக சிவத்தம்பி
சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இக் குழுவில் கனிமொழி எம்பியும் இடம் பெற்றுள்ளார்.
கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பி பங்கேற்பது குறித்து சந்தேகங்கள் கிளம்பி வரும் நிலையில் அவருக்கு இந்தப் பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மாநாட்டில் அவர் பங்கேற்கிறார் என்று முதல்வர் அறிவிக்க, மாநாட்டில் பங்கேற்பது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை சிவத்தம்பி தெரிவித்ததாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக முனைவர்கள் ஒளவை.நடராஜன், பொன்.கோதண்டராமன் ஆகியோரும், செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன் ஆய்வரங்க அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆய்வரங்கப் பணிகளை திட்டமிடவும், செயல்படுத்தவும், துணைத் தலைவர்கள், துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும் ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, அனைத்து ஆய்வரங்கப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
டைரக்டர்கள் நடிக்கும் நாடகம்-செய்தி படம்:
இந்த மாநாட்டில், திரைப்பட இயக்குனர்கள் எழுதி நடிக்கும் வரலாற்று நாடகமும் இடம்பெறுகிறது. மேலும் 5 நிமிடம் ஓடும் செய்திப் படத்தையும் அவர்கள் தயாரிக்கவுள்ளனர்.
இத் தகவலை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
இந்த செய்திப் படம் மாநாடு முடிந்த பிறகு, அடுத்த 6 மாத காலத்திற்கு வெளிவரும் எல்லா தமிழ் படங்களின் இடைவேளையிலும், மாநாட்டு சிறப்புகளை சுட்டிக் காட்டும் வகையில் காட்டப்படுமாம்.