விடுதலைச் சிறுத்தைகள் தலைமையகம் இடிப்பு: தடுக்க முயன்ற 49 பேர் கைது
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையக கட்டடம் நேற்று இடிக்கப்பட்டது. இதைத் தடுக்க முயன்று போராட்டம் நடத்திய 49 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
சென்னை அசோக்நகர் 100 அடி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகம் இருந்த இடம், சிவராம் பிரசாத் என்ற முன்னாள் ராணுவ வீரருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இடத்தைக் காலி செய்தனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிவராம் பிரசாத் அந்த நிலத்தில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர். மாவட்ட பொருளாளர் தினகரன் தலைமையில் திரண்ட அவர்கள் சுற்றுச்சுவர் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
கட்டிடத்தை இடிப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் அங்கிருந்து வெளியே செல்லவும் மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சிவராம் பிரசாத் அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினார்கள்.
ஆனால் உள்ளே இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வெளியே வர மறுத்து விட்டனர். அதையடுத்து தினகரன் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கோடம்பாக்கத்தில் உள்ள திருமணம் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், கட்சித் தொண்டர்கள் கோயம்பேடு அம்பேத்கர் சிலை அருகே திரண்டனர். 100 அடி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டித்து அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு சுமார் 20 நிமிடங்கள் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில், கட்சி பொதுசெயலாளர் கலைக்கோட்டுதயம், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர் இரா.செல்வம் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications