Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸி. - இந்தோனேசியா இழுபறியில் சிக்கித் தவிக்கும் தமிழ் அகதிகள்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலிய அரசுக்கும், இந்தோனேசிய அரசுக்கும் இடையில் சிக்கி கடலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 78 இலங்கைத் தமிழர்கள்.

கடந்த அக்டோபர் 18ம் தேதி சுந்தா ஜலசந்திப் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு படகிலிருந்து ஆபத்து கால சமிக்ஞைகள் வெளியாகின. அது இந்தோனேசிய கடல் பகுதி, ஜாவாவுக்கும், சுமத்ராவுக்கும் இடைப்பட்ட சிறிய கடல் பகுதி.

அப்போது தங்களிடம் மீட்புப் படகு எதுவும் இல்லாததால், ஆஸ்திரேலியாவின் உதவியை நாடியது இந்தோனேசியா. இதையடுத்து ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலான ஹமாஸ் ஆர்மிடேல் அங்கு விரைந்தது.

தத்தளித்துக் கொண்டிருந்த படகில் 78 இலங்கைத் தமிழர்கள் இருப்பதும், அவர்கள் ஆஸ்திரேலியாவில் புகலிடம் நாடி வந்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. அதை விட அபாயகரமாக, அவர்கள் இருந்த சாதாரண மரப் படகு கடலில் செல்லக் கூடிய தகுதியில் இல்லாததும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் பயன்படுத்தக் கோடிய ரோந்துக் கப்பலான ஓசியானிக் வைகிங் கப்பலுக்கு அனைவரையும் மாற்றியது ஆஸ்திரேலியக் கடற்படை.

இந்த நிலையில், 255 தமிழர்களுடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்து கொண்டிருந்த இன்னொரு சிறிய கப்பலை இந்தோனேசிய கடற்படையினர் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி மேற்கு ஜாவாவுக்குக் கொண்டு சென்றனர்.

இந்தக் கப்பல் தற்போது மேரக் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 78 தமிழர்கள் அடங்கிய படகும், இந்தோனேசிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று துயரச் சம்பவமாக ஆஸ்திரேலியா நோக்கி வந்த ஒரு அகதிகள் படகு காக்கஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது. இதில் 27 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

சமீப காலமாக ஆஸ்திரேலியாவை நோக்கி ஏராளமான அகதிகள் வரத் தொடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு வாழவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதால் மலேசியாவுக்குத் தப்பி வந்து அங்கிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி தங்களது உயிரைப் பணயம் வைத்து வந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு வெறும் 161 பேர் மட்டுமே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அகதிகள் விஷயத்தில் பிரதமர் கெவின் ரூட் தலைமையிலான அரசு இளக்கமாக நடந்து கொள்வதாக அந்த நாட்டு எததிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

கெவின் ரூட்,அகதிகள் விஷயத்தில் மென்மையாக நடந்து கொள்வதால், மலேசியா, இந்தோனேசியாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஆள் கடத்தல் நபர்களுக்கு பெரும் கொண்டாட்டமாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தனக்கும், தனது அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அகதிகள் விஷயத்தில் இரக்கம் காட்ட முடியாது என்று கூறத் தொடங்கியுள்ளார் கெவின் ரூட்.

தற்போது படகை விட்டு இறங்காமல் உள்ள 78 தமிழர்களையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா மிரட்டத் தொடங்கியுள்ளது. இந்தத் தமிழர்களும் சரி, மேற்கு ஜாவாவில் தவித்துக் கொண்டிருக்கும் 255 தமிழர்களும் சரி, தங்களுக்கு ஆஸ்திரேலியா அல்லது வேறு ஏதாவது நாடு புகலிடம் கொடுத்தால்தான் படகை விட்டு இறங்குவோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

ஆனால் இந்தோனேசியாவோ அல்லது ஆஸ்திரேலியாவோ இவர்களை அகதிகளாக ஏற்று தங்க வைக்கும் மனோ நிலையில் இல்லை.

ஆஸ்திரேலியாவால் மீட்கப்பட்டு இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்ட 78 தமிழர்களும் தற்போது பின்டன் தீவில் உள்ளனர். பின்டன் தீவின் ஆளுநர் இஸ்மத் அப்துல்லா கூறுகையில், புகலிடம் கோரி வருவோரைத் தங்க வைக்க இது இடம் அல்ல. படகில் உள்ள யாரையும் இங்கு தங்க விட மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

இருப்பினும் நீண்ட காலம் தங்க மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்தால் அவர்களை தங்க அனுமதிப்போம் என தற்போது கூறி வருகிறார்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு அல்லது வேறு ஒரு நாடுக்கு தங்களை அனுப்புவதாக உறுதியளித்தால் மட்டுமே படகை விட்டு இறங்குவோம் என கூறி வருகின்றனர்.

மேலும் படகுகளில் உள்ள தமிழர்கள் பட்டினிப் போராட்டங்களை நடத்தி விட்டனர். பலமுறை தற்கொலை செய்யப் போவதாகவும் கூறி விட்டனர். இருப்பினும் இதுவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

வருகிற 6ம் தேதி வரை மட்டுமே தங்களது கடல் பகுதியில் ஓசியானிக் வைகிங் படகை நிறுத்தி வைக்க அனுமதிப்பது என்ற முடிவுக்கு தற்போது இந்தோனேசியா வந்துள்ளது. இதனால் அதன் பின்னர் அவர்கள் நிலை என்னவாகப் போகிறது என்பது தெரியவில்லை.

இப்படி இழுபறி நிலவுகிற போதிலும், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் கட்டாயப்படுத்தி தமிழர்களை கீழே இறக்குவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளன. மேலும், மனிதாபிமான கண்ணோட்டத்திலும் அந்த நாடுகள், தமிழர் பிரச்சினையை அணுகி வருகின்றன.

255 பேருடன் உள்ள கப்பலில் ஒரே ஒரு கழிப்பறைதான் உள்ளதாம். அந்தக் கப்பலில் உள்ள 17 சிறார்களும் உரிய சத்துணவு இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்த தமிழர்களில் சிலர் தொலைபேசி மூலம் செய்தியாளர்களைத் தொடர்பு கொண்டு தங்களை அகதிகள் என நிரூபிக்கத் தேவையான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பின்டன் தீவில் சிக்கியுள்ள 78 தமிழர்களும் தாங்கள் தற்கொலை செய்யப் போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கப்பலில் தங்களுக்கு போதிய வசதி இல்லை, சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை, 9 மாத கைக் குழந்தைகளுக்கு பால் வழங்கவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தங்கள் கப்பலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆஸ்திரலிய சுங்க அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் தங்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படி இழுபறி நீடிப்பதால் இரு கப்பல்களிலும் உள்ள தமிழர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+