கெளரவ பதவி வேண்டாம், சிஆர்பிஎப்பில் சேர ஆசை-ருக்ஷானா
அதற்குப் பதிலாக தன்னை மத்திய துணை ராணுவப் படையில் வீரராக சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ருக்ஷானாவுக்கும் அவரது சகோதரர், உறவினருக்கும் கெளரவப் பதவியை தந்தது ஜம்மு காஷ்மீர் காவல்துறை. ஆனால், இந்தப் பதவியால் தனக்கு மாத வருமானம் வருமே தவிர, உண்மையான போலீஸ் அதிகாரியாக செயல்பட முடியாது என்று கூறி அதை ஏற்க ருக்ஷானா மறுத்துவிட்டார்.
அதற்குப் பதிலாக உண்மையிலேயே ஆயுதம் தாங்கி தீவிரவாதிகளை எதிர்க்கும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலோ அல்லது வேறு துணை ராணுவப் படையிலோ வேலை தருமாறு கோரியுள்ளர்.
கெளரவப் பதவியாக அல்லாமல் அது உண்மையான வேலையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ருக்ஷானா.
தனது குடும்பத்தாருக்கு தீவிரவாதிகளால் பெரும் ஆபத்து உள்ளதாகக் கூறியுள்ள அவர், தனது குடும்பத்தை வேறு ஊருக்கு இடம் மாற்றி பாதுகாப்பு தர வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி ரஜோரியில் உள்ள ருக்ஷானாவின் வீட்டுக்குள் லஷ்கர் தீவிரவாதிகள் புகுந்தனர். இதையடுத்து அவர்களைத் தாக்கிய ருக்ஷானா தீவிரவாதிகள் கையில் வைத்திருந்த ஏ.கே. 47 துப்பாக்கியைப் பறித்து சரமாரியாக சுட்டார். இதில் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான். இன்னொருவன் காயமடைந்தான்.
இதையடுத்து சமீபத்தில் ருக்ஷானாவின் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.