வெள்ள பாதிப்பு-சென்னையில் 19 சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு
சென்னை: சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 19 சமையல் கூடங்களில் மாநகராட்சி சார்பில் உணவு தயாரித்து விநியோகிக்கப்படுகிறது.
சென்னை நகரில், குறிப்பாக வட சென்னையில் பல பகுதிகள் இன்னும் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
வியாசர்பாடி கணேசபுரம், கன்னிகாபுரம், மீனாம்பாள் நகர், கே.எம்.கார்டன், அருந்ததி நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அடையாறு ஆற்றங்கரையோர குடிசை வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். சமையல் செய்ய முடியவில்லை. வெள்ளம் பாதித்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் யாரும் முகாம்களுக்கு செல்ல விரும்பவில்லை. பொருட்கள் திருட்டு போய் விடும் என்பதால் வீடுகளிலேயே இருக்கின்றனர். உணவை மட்டும் எதிர்பார்க்கின்றனர்.
இதையடுத்து தேவைப்படுபவர்களுக்கு உணவு தயாரித்து வழங்க மேயர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டார்.
அதன்படி, தற்போது சிந்தாதிரிப்பேட்டை, புளியந்தோப்பு, கோபாலபுரம் உள்பட 4 நிரந்தர சமையல் கூடங்கள், 15 தற்காலிக சமையல் கூடங்களில் சமையல் நடந்து வருகிறது.
அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பெரிய பெரிய அண்டாக்களில் எடுத்து சென்று விநியோகித்து வருகின்றனர். நேற்று 56 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இன்று காலையில் 46 ஆயிரம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மொத்தம் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் உணவு தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயனாவரத்தில் 15 வீடுகள் இடிந்தன:
சென்னை அயனாவரம் வாட்டர் டேங்க் ரோட்டில் அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 4 அடுக்குகளை கொண்ட இந்த குடியிருப்பில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
வீடுகளின் மேல்தளம் சேதம் அடைந்துள்ளதால் மழை தண்ணீர் வீடுகளுக்குள் தேங்குகிறது. இந்நிலையில் இன்று காலையில் இக்குடியிருப்பில் 15 வீடுகளின் மேற்கூரை ஒரு பகுதியில் இடிந்து விழுந்தது.
இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளைவிட்டு வெளியில் வந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று சேதம் அடைந்த வீடுகளை பார்த்தனர்.
இடிந்து போன வீடுகளில் குடியிருந்தவர்கள் தங்களுக்கு இதே குடியிருப்பில் காலியாக உள்ள மற்ற வீடுகளை ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. வீடுகளை ஒதுக்கி தருவதில் நாங்கள் தனியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், இதுபற்றி அரசுடன் ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications