பிலிப்பைன்ஸ்-தலைமையாசிரியர் தலை துண்டிப்பு
ஜாம்போயங்கா (பிலிப்பைன்ஸ்): பிலிப்பைன்சில் பணத்துக்காக பள்ளித் தலைமை ஆசிரியரை கடத்திச் சென்ற தீவிரவாதிகள், பணம் கிடைக்காததால், ஆசிரியரின் தலையை வெட்டி பையில் போட்டு பெட்ரோல் பங்கில் வீசிச் சென்றுள்ளனர்.
பட்டிகுல் முனிசிபலுக்கு உட்பட்ட ஜோலோ நகர் அருகே கேபிரியேல் என்ற பள்ளி தலைமை ஆசிரியரை தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 18ம் தேதி கடத்திச்சென்றனர்.
ஆசிரியரை விடுவிக்க வேண்டுமானால், 2 மில்லியன் பெஸோ (42,373 டாலர்) தரவேண்டும் என மிரட்டினர். குறித்த நேரத்தில் ஆசிரியரின் உறவினர்கள் பணத்தை தர மறுத்ததால், கோபமடைந்த தீவிரவாதிகள் இந்த வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.
பையில் இருந்த ஆசிரியரின் தலையை மட்டும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். உடலை மீட்கவில்லை. அபுசய்யாப் என்ற தீவிரவாத இயக்கம் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. தீவிரவாதத்தை வேரறுப்போம் என அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்பு, அமெரிக்காவின் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.