பாஜகவின் அடுத்த தலைவர் கட்காரி?

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பாஜகவின் செயல்பாடுகளை ஆர்எஸ்எஸ் நேரடியாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை பதவி விலகச் சொல்லிவிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர் பதவிக்கு நிதின் கட்காரியை இறுதி செய்துவிட்டதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிரததைச் சேர்ந்தவரான கட்காரி அம் மாநில பாஜக தலைவராக உள்ளார். பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் மிக நெருக்கமானவர் ஆவார்.
ராஜ்நாத்தையடுத்த அந்தப் பதவியைப் பிடிக்க அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி, அனந்த் குமார், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் போட்டியிட்டாலும் அடுத்த தலைவர் டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படுபவராக இருக்கக் கூடாது என்று கூறிவிட்டது ஆர்எஸ்எஸ்.
இதையடுத்து நிதின் கட்காரியை மோகன் பகவத்தே தேர்வு செய்துள்ளார்.
இந்தப் பதவிக்கு கோவா மாநில பாஜக தலைவர் பரிக்கரின் பெயரும் அடிபட்டது. ஆனால், அத்வானியை ஊசிப்போன ஊறுகாய் என விமர்சித்ததால் அவருக்கு வாய்ப்பு அடிபட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று டெல்லி வந்த கட்காரி மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் டிசம்பர் மாத இறுதியில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications