நாங்க ஜெயிச்சா எல்லோருக்கும் மினரல் வாட்டர் - சிரஞ்சீவி
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் எனது கட்சி வெற்றி பெற்றால் வீட்டுக்கு வீடு இலவசமாக மினரல் வாட்டர் தருவேன் என்று நடிகர் சிரஞ்சீவி வாக்குறுதி அளித்துள்ளார்.
எதைத்தான் வாக்குறுதியாக அளிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. கலர் டிவி, இலவச அரிசி, காஸ் அடுப்பு, காஸ் சிலிண்டர் என சகலத்தையும் இலவசமாக அளிக்கும் காலம் இது.
இந்த வரிசையி்ல் படு நூதனமாக ஜெயித்தால் அனைவருக்கும் இலவச மினரல் வாட்டர் தருவேன் என்று அள்ளி விட்டுள்ளார் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி.
ஹைதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் சிரஞ்சீவி ஈடுபட்டுள்ளார்.
குக்கட்பள்ளி என்ற இடத்தில் அவர் பேசுகையில்,
ஹைதராபாத்தில் கழிவு நீர் சாக்கடையையொட்டி குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. சில சமயத்தில் குடிநீர் குழாயில் சிறிது துவாரம் ஏற்பட்டாலும் கூட சாக்கடை நீர் கலந்து விடுகிறது.
இதனால் மக்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. மேலும் தற்போது குழாய் வழியாக வரும் குடிநீர் சுத்தம் இல்லாமல் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதனால் நடுத்தர வசதி படைத்த மக்கள் பெரிய மினரல் வாட்டர் கேன் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அத்தியாவசிய தேவையான குடிநீரை நன்றாக சுத்திகரித்து மினரல் வாட்டராகவே சப்ளை செய்வோம்.
ஆந்திர மக்களை ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. மினரல் வாட்டரை அரசே குழாய்களில் சப்ளை செய்ய முடியும். இதன் மூலம் குடிநீர் வியாபாரத்தைக்கூட முழுமையாக தடை செய்து விடலாம் என்றார் சிரஞ்சீவி.