கத்காரி தலைவராக எதிர்ப்பு-மோடிக்கு ஆதரவு
டெல்லி: பாஜகவில் ராஜ்நாத் சிங்குக்கு மாற்றாக கட்சித் தலைவர் பதவிக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிதின் கத்காரியின் பெயர் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டது. கத்காரியை தலைவராக்க அத்வானி சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடன் பேசி, 52 வயதான நிதின் கத்காரியை அத்வானி தான் தேர்ந்தெடுத்தார் என்றும், வயதானவர் என்ற இமேஜ் பெற்றுவிட்ட ராஜ்நாத்துக்கு நிதின் சரியான மாற்றாக இருப்பார் என்றும் தலைவர்கள் கருதியதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மகாராஷ்டிர மாநில பாஜக தலைவராக இருக்கிறார் கத்காரி. இதற்கிடையே பாஜக தலைவாரகப் பொறுப்பேற்கப் போவதையடுத்து மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் பதவிக்கு போட்டி எழுந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவின் ஆதிக்கத்தை கணிசமாக குறைத்து, இரண்டாம் இடத்திற்கு பாஜகவை கொண்டுவந்த பெருமை நிதினுக்கு உண்டு. அடிப்படையில் விவசாயி மற்றும் தொழிலதிபரான நிதின் சிறந்த நிர்வாக திறமை கொண்டவர் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
மோடியை தலைவராக்க கோரிக்கை:
இந் நிலையில் நிதின் கத்காரியை புதிய தலைவராவதை அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜகவின் சில மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் தலைவராக வேண்டும் என இந்த கோஷ்டி வலியுறுத்துவதாகத் தெரிகிறது.