கோவை உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு-ஆலோசனைக் கூட்டம்
சென்னை: கோவையில் புதிய தமிழகம் சார்பில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழர் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு கோவை வ.ஊ.சி திடலில் வரும் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் புலவர் புலமைபித்தன், கவிஞர் இன்குலாப், திருச்சி வேலுச்சாமி, புதுக்கோட்டை குருமூர்த்தி, கவிதா சரண், புகழேந்தி தங்கராஜ், ராஜேந்திர சோழன், சீதையின் மைந்தன், எஸ்.எம். பாக்கர், பொன். எழுமலை, பன்னீர்செல்வம், ஆற்றலரசு உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், இலங்கையில் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர்களின் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த வலியுறுத்தியும் உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
உலகெங்கும் வாழும் தமிழர் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று, தமிழர்களுக்கு சமூக விஞ்ஞான ரீதியான தீர்வு காண்பதற்கு ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications