அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்-வைகோ

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஈழத்தில் நடப்பது என்ன என்ற கூட்டத்தில் வைகோ, மு.கண்ணப்பன் (இப்போது திமுகவுக்குத் தாவி விட்டார்) உள்ளிட்டோர் பேசினர்.
அந்தப் பேச்சு சட்டவிரோதமானது எனறு கூறி வைகோ மீது ஜார்ஜ்டவன் கோர்ட்டில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நகலை வாங்கிக் கொள்ளுமாறு கூறி வைகோ உள்ளிட்டோருக்கு மாஜிஸ்திரேட் சுந்தரமூர்த்தி சம்மன் அனுப்பினார்.
அதன்படி வைகோ இன்று கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ளக் கூறி வழக்கு டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த அரசு பழிவாங்கும் நோக்கத்தில் என்மீது இப்போது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புலன் விசாரணை முடிந்து ஒரு ஆண்டுக்கு பிறகு என் மீது வழக்கு நடக்கிறது. நானும், கண்ணப்பனும் அன்று பேசியது குறித்து அப்போதே கோர்ட் எங்களை சிறையில் இருந்து விடுவித்தது.
இப்போது அவர் திமுகவில் சேர்ந்து விட்டார். அப்போது கண்ணப்பன் பேசியது கூட தவறு இல்லை. கண்ணப்பனையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று இப்போது நான் கூறவில்லை. பழிவாங்கும் நடவடிக்கைக்கு இது ஒரு உதாரணம். நான் வழக்கை கண்டு அஞ்சவில்லை. எதிர் கொள்வேன்.
மதிமுக தேசிய ஒருமைப்பாட்டை ஏற்று கொண்ட கட்சி. தனி தமிழ்நாடு எங்கள் எண்ணம் கிடையாது.
அதிமுக பொதுச்செயலாளர் புரட்சிச் தலைவி ஜெயலலிதா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை அழைத்து பேசினார். தொலை பேசியிலும் பேசினார்.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என்றார் வைகோ.
திமுகவில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்-அன்பழகன்:
இந் நிலையில் திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வருகிற 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 19.12.2009 அன்று நடைபெற உள்ள திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகின்றீர்களோ அந்தத் தொகுதிக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 24.11.2009 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் திருச்செந்தூர் தொகுதி ரூ.5,000, வந்தவாசி (தனி) தொகுதி ரூ.2,500. விண்ணப்பப் படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications