சபரிமலை பாதுகாப்பு-பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை
டெல்லி: சபரிமலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நவம்பர் 15ம் தேதி சபரிமலையில் 2 மாத யாத்திரை கால கட்டம் தொடங்கியது. இந்த யாத்திரை மண்டலம் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனத்துடன் நிறைவடையும்.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து சபரிமலையின் பாதுகாப்பு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்த இன்று பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் இக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் கேரள மாநில டிஜிபி ஜேகப் புன்னோஸ், அம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், சபரிமலைக்கான சிறப்பு ஆணையருமான ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சபரிமலையில் அதிவிரைவுப் படையினர் உள்பட 14,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 நாளில் ரூ.9.27 கோடி வருமானம்:
இந் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை தொடங்கிய 5 நாட்களில் ரூ.9.27 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
அரவணை பிரசாத விற்பனை மூலம் ரூ.4.05 கோடியும், அப்பம் பிரசாதம் விற்பனை, காணிக்கை மூலம் சுமார் ரூ. 5 கோடியும் வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கோயிலுக்கு ரூ.7.2 கோடி வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அப்பம்,அரவணை வாங்குவதற்கான கூப்பன்கள் தனலட்சுமி வங்கியின் 211 கிளைகள் மூலம் நாடு முழுவதும் வினியோகம்செய்யபட்டு வருகிறது. சன்னிதானத்தில் 24 பிரசாத வினியோக கவுண்டர்கள் 24 மணி நேரமும் செயல்படும். இதில் 90 நிரந்தர ஊழியர்களும், 150 தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
சபரிமலையில் தொடர் மழை பெய்த போதிலும், பக்தர்கள் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications